சென்னை:-
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
ஏனைய 28 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக். 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது பாட்டில் விற்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மது பாட்டில்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 5 கி.மீ.சுற்றளவில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.