கொரோனா நோய் தொற்று குறைவாக உள்ள 4 மாவட்டங்களில் மாவட்டங்களுக்குள் 50 சதவிகித பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் நோய் தொற்று குறைவாக உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி (நாளை) முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒருவாரத்துக்கு ஜூன் 28ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்குள்ளும், இந்த 4 மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 4 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதி.
அதேசமயம், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் இல்லை; தற்போதைய நிலையே தொடரும் என அரசு அறிவித்துள்ளது.