தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயிலில் இஸ்லாமியர் ஒருவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ???
ஆனால் நம்பி தான் ஆகவேண்டும், பரமக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் தான் ஜவ்வாது புலவர் என்ற இஸ்லாமிய மனிதருக்கு சிலை வைத்துள்ளார்கள்
யார் இந்த ஜவ்வாது புலவர் ?? இந்து கோயிலில் இஸ்லாமியரான இவரது சிலை வைத்துள்ளதற்கான காரணமா என்ன என்பதை காணலாம்.
பல்வேறு புலவர்கள் வாழ்ந்து மறைந்த இந்த தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் ஜவ்வாது புலவர் என்றழைக்கப்பட்ட முஹம்மது மீர் ஆவார்.
இன்றைய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகே உள்ள எமனேஸ்வரம் என்ற ஊரில் 1745-ம் ஆண்டு பிறந்தார் முஹம்மது மீர்.
ஜவ்வாது புலவர் அன்றைய ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும் , அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.
இவரது புலமை காரணமாக அந்தகால புலவர்களால் ‘வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல்புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி’ எனப் பாராட்டப்பட்டவர்.
அதுமட்டுமல்ல வசைபாடுவதில் காளமேகப் புலவரை ஒத்து விளங்கினார் ஜவ்வாது புலவர்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் ஒருமுறை இவருக்குப் பண உதவி செய்ய மறுத்த சேஷையங்கார் என்பவரைச் கோபத்துடன்,
.
“வீசம் பணம் கொடுக்காத சேசா
வீரியம் பாம்பு கடித்துச் சாசா” – என்று சபிக்க அன்றே அவர் பாம்பு கடித்து இறந்தார் சேஷையங்கார்.
இவர் தமிழில் பல இசுலாமிய மற்றும் இந்து ஆண்மீக இலக்கியங்களைப் படைத்துள்ளார். இதில் முருகன் மீதும் இதர இந்துக் கடவுள்களின் மீதும் நிறைய பக்தி பாடல்களை பாடியுள்ளார்.
இஸ்லாமியராக இருந்தாலும் முருகனை பெருமைப்படுத்திப் பாடியதால் ஜவ்வாது புலவருக்கு , மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி கோயில் கோபுரத்தில் ஜவ்வாது புலவருக்கு சிலை வைத்து நன்றிக் கடன் செலுத்தி இருக்கிறார்கள் அவ்வூர் இந்துகள் .
கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது தான் ஜவ்வாது புலவரை கௌரவிக்கும்விதமாக , மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவர் பாடிய முருகன் பாடல்களை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்ததோடு, கோயிலின் கோபுரத்தில் ஜவ்வாது புலவரின் உருவத்தை சுதை சிற்பமாக வடித்து வைத்தார்கள்
ஜவ்வாது புலவர் , முருகன் கோவிலில் சிலையாக உயர்ந்து நிற்பதோடு அனைவரது உள்ளத்திலும் உயர்ந்து நிற்கிறார் .
இஸ்லாமியராக இருந்தும் முருகனை பாடுவதற்கு , அவருக்கு மதங்களை எல்லாம் கடந்த இறை ஞானமும் நல்லிணக்கமும் இருந்திருக்க வேண்டும்.
அதே இறைஞானமும் நல்லிணக்கமும் அந்த மேலக்கொடுமலூர் மக்களுக்கும் உள்ளது.