மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகம் வருகை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சியில், அதிமுக அரசு உடந்தையாக இருப்பதாகக் குறை கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி விருப்பம் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு கமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார்.