இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர்.
மேலும் ராமேசுவரத்தை சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மற்றும் படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்திய பின், இன்று காலை மீனவர்கள் 6 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 6 மீனவர்களையும் வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.