சென்னை:-
தமிழகம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழுவுக்கு (Friends Of Police) தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் ஜூன் 19ல் நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்தனர். போலீசார் கொடூரமாகத் தாக்கியதால், இருவரும் இறந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினருக்கும், தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை நிரந்தரமாக கலைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பயன்படுத்த கூடாது என்றும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதில் ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டது.
இதனை மீறி பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து எதிர்மறையான அறிக்கையை காவல்துறை தலைவர் அரசுக்கு அளித்துள்ளார். டிஜிபி அளித்த அறிக்கை அடிப்படையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையில் பற்றாக்குறை ஏற்பட்டதால் போலீசாருக்கு உதவிடும் நோக்கால் 1993ல் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்ற, ‘காவல்துறை நண்பர்கள் குழு’ ராமநாதபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப் முதல்முதலில் ஏற்படுத்தினார். இந்த குழுவில், வாலிபர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.
இவர்கள், போலீசாருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது, போக்குவரத்தை சீர் செய்வது, குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கவும், பிடிக்கவும் உதவுவது என, பல்வேறு வகையில் உதவிகரமாக செயல்பட்டு வந்தனர்.
ஆனால் அதேநேரம், போலீசார், இவர்களை அடியாட்கள் போல பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது வந்தது குறிப்பிடதக்கது.