தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த வாரம் ஒரே இரவில் சென்னையில் கனமழை கொட்டியது. இதனால் சென்னையின் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறின.அதன்பின்னர் மீண்டும் நேற்றிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், தென் மேற்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், வடகிழக்கு பருவமழை வலுவடைவதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவ மழை வலுவடைவதன் காரணமாகவும் தமிழகம் மற்றும் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளதாக கூறியுள்ளது.மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கும், கேரளாவில் வரு 6ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.