அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கிடையாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தலைமை செயலாளர் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், ஆக்கிரமிப்பு குறித்து அரசிடம் தெரியப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கிராம அளவில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தோரை கொண்டு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு அவற்றின் மதிப்பை ஜீரோ என நிர்ணயிக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாரும் பதிவு செய்ய கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்துள்ளனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்