பல மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
அதன்படி ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இணையவழி கற்றல் முறை மாற்று கற்பித்தல் முறையாக தொடர்ந்து இருக்கும். அதாவது மாணவர்கள் பள்ளிக்கு வராமல், இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அதற்கு அனுமதி அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதார துறையால் வழங்கப்படவிருக்கின்றன.
அனைத்து பள்ளிகளிலும் உடல்வெப்ப பரிசோதனை கருவிகள், கிருகிநாசினிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது. இதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை கழுவுவது உள்ளிட்ட கொரோனா தொடர்பான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.