சென்னை:
சென்னை திருநின்றவூர் பகுதியில் சரஸ்வதி என்பவர் தனது 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சரஸ்வதி வீட்டில் இருந்து அழுகிய வாடை வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், சரஸ்வதியின் மகன் இறந்து அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவன் உயிரிழந்தது குறித்து சரஸ்வதியிடம் மேற்கொண்ட விசாரணையில், பசியால் மகன் இறந்து விட்டதாகவும் என்ன செய்வதென்று அறியாமல் வீட்டிலேயே வைத்திருப்பதாகவும் சரஸ்வதி கூறியதாக தெரிகிறது.இதனையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சிறுவன் பசியால் தான் உயிரிழந்தானா???? அல்லது கொலை செய்யப்பட்டானா??? என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சிறுவனது உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான், அவரது மரணம் குறித்த உண்மை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறந்து 3 நாட்கள் ஆகி, அழுகிய சடலத்துடன் கிடந்த மகனுடன் சரஸ்வதி 3 நாட்கள் வசித்து வந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.