கள்ளக்குறிச்சி:
ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் அவர் வீட்டின் அருகே வசிக்கும் நர்மதா என்ற பெண்ணும் காதலித்தனர். அதில் நர்மதா கர்பமானதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனிடம் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பூவரசன் தலைமறைவானதால் நர்மதா காவல்துறையில் புகார் அளித்தார். பூவரசனை கண்டறிந்த போலீசார் நர்மதாவுடன் திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பினர்.
இந்நிலையில் ஒரு நாள் பூவரசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.அதில் எதிர்முனையில் பூவரசனின் காதலி தீபிகா பேசுவதாக ஒரு பெண் கூறினார். அப்போதுதான் பூவரசன் இருவரையும் ஏமாற்றியது நர்மதாவுக்கு தெரியவந்தது.
வீட்டை விட்டு வெளியேறிய பூவரசன் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார். தீபிகாவை அழைத்து பேசிய காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.