கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலின் அறங்காவலர் ஸ்ரீதரன் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்மீது சட்டரீதியான நடவடிக்கையை தொடரலாம் என்றும் அறநிலையத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின்போது கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதி, கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையைக் கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்றும், அந்த பிரிவை பொதுமக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணை அறிவிக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிடுக என்றும் தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். -சா.கற்பகவிக்னேஷ்வரன்