தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்கலைக்கழங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வரிடம் வைத்த கோரிக்கையை அடுத்து டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஜனவரி 20ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்தோம். தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவதைப் பொறுத்து தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். செய்முறை தேர்வுகளில் குறைந்த அளவிலான மாணவர்களே பங்கேற்பதால் அவை நடத்தப்படும் என்றும், விடுமுறை காலத்தை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கைவைத்துள்ளார்.