மதுரை:
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மதுரையை மையமாக வைத்து பார்சல் நிறுவனங்கள் மூலம் தென் மாவட்டத்திற்கு தேவையான குட்கா பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் பார்சல் நிறுவனங்கள் மீது அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் பெங்களூர் மற்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் பார்சல் சர்வீஸ் மூலமாக குட்கா சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மதுரையில் பிரபலமான தினசரி பார்சல் சர்வீஸ் நிறுவனங்களான வடக்குமாசி வீதி செல்வி டிரான்ஸ்போர்ட், பரமேஸ்வரன் பிள்ளை சந்தில் உள்ள இர்பான் கேரியர்ஸ், கீழ வெளி வீதி பாவா லாரி சர்வீஸ், மாசு ரெகுலர் சர்வீஸ், விநாயகா கேரியர் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் தினசரி குட்கா பார்சல்கள் சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து தலா 100 கிலோ வீதம் குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மதுரை உணவு பாதுகாப்பு தனி அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட 5 பார்சல் சர்வீஸ் நிறுவனங்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.