சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவரது பதிவு.
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புகிற நபர்களை ஏதோ சதி வேலை செய்ய வந்த அயல்நாட்டு தீவிரவாதி போல தான் உள்ளூர் மக்கள் அணுகுகிறார்கள். மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் இருக்கிறதே, தவிர விழிப்புணர்வு இல்லை. இன்னும் பல ஊர்களிலும் சென்னை ரிட்டன்ஸ் நிலைமை மிகவும் மோசம்.
பொதுவாக வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களிலிருந்து சொந்த ஊர் திரும்புகிற மக்கள் 7 நாட்கள் தங்களை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் அறிகுறி தென்பட்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டால் நேரடியாக மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம். ஆனால் அதுவரை உங்கள் அக்கம் பக்கத்தினர் உங்களை வீடுகளில் இருக்க விட மாட்டார்கள் என்பதே நிதர்சனம். நீங்கள் சொந்த ஊருக்கு சென்ற பின்னர் முதலில் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்துவிடுங்கள்.
தற்போதைய சூழ்நிலையில் சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் இதர நகரங்களில் இருந்து வருபவர்கள் கூட இதுபோன்ற நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
பெரும்பாலான பெரிய அரசு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனைகள் பெருமளவில் மேற்கொள்வதில்லை. கிராமிய பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் இந்த கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சரி இந்த கோரோனா பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? Swab பரிசோதனை என்றால் என்ன? ன்று பார்ப்போம்.
கொரோனா நோயாளிகளுக்கு எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட் (Swab Test) என்றால் என்ன?
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு Swab பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் இந்த டெஸ்ட் எடுப்பதற்கு 5 நிமிடங்கள் கூட ஆகாது. முதலில் பரிசோதனைக்கு செல்பவரின் நாசியில் நீண்டதொரு ஸ்பாஞ்ச் உள்ள குச்சி செலுத்தப்படுகிறது. இதன்மூலமாக நாசியில் (Nasopharyngeal (NP)) உள்ள சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இதேபோன்று மற்றொரு குச்சி தொண்டையினுள் விடப்படுகிறது. இதன் மூலம் தொண்டையில் (Oropharyngeal (OP)) உள்ள சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
இந்த பரிசோதனைக்கு நீண்ட நேரம் ஆவதில்லை. ஆனால் இந்த பரிசோதனைக்கு செல்வதற்கு முன்னரும், பின்னரும் மக்கள் முறையாக சமூக விலகளை கடைபிடிக்கிறார்களா என்றால்? இல்லை, என்பதுதான் விடை.
தற்போது கொரோனா பரிசோதனை மூன்று வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
அவை, Coronavirus Blood Test (Antibody), Swab Test (PCR) மற்றும் Saliva Test.
தற்போது, தமிழகம் முழுவதும் Swab Test பரிசோதனை தான் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்தப் பரிசோதனைக்கு தொண்டை மற்றும் நாசியில் உள்ள சளியில் இருந்து மாதிரிகள் சேகரித்து தான் செய்ய வேண்டும் என்று இல்லை. கொரோனா வைரஸால் கண்கள் கூட பாதிக்கப்படலாம், விழியில் தொற்று எற்பட்டால் கண்களில் உள்ள படலத்தின் மூலம் கூட இந்த சோதனையை மேற்கொள்ளலாம்.
மக்களுக்கு கோரோனா குறித்த அச்சம் இருந்தாலும், கொரோனா குறித்த விழிப்புணர்வு துளியும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.