தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் மற்றும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக வரலாற்றில் புதிதாக இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பது குறித்து ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பது தொடர்பாக மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.