சென்னை:-
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு மீதான ஆலோசனைக்கு பிறகு வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
அதன்படி,
அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை – கார் – சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ.300 கோடி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.