தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 21 ஆயிரத்து 770 பேருக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்து வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாடு முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ், 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறவு (E.S.I) திட்டத்தின் கீழ், பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும்.
இதற்காக ரூ.2.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.