சென்னை:-
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1-ந்தேதியை அன்றைய அதிமுக அரசு தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இந்த தினத்தில் தான் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவை தனி மாநிலங்களாக பிரிந்தன.
எதையாவது மாற்ற வேண்டும் என்று தற்போது மதராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றிய ஜூலை மாதம் 18-ந்தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என கொண்டாட வேண்டும் என தெரிவித்தும், அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் அறிஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும், விரைவில் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 1956ம் ஆண்டு தமிழகத்தின் எல்லை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வாழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.