திருப்பூர்:-
எளிய முறையில் திருமணத்தை நடத்தி திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சமான 37.66 லட்சத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக திருப்பூரை சேர்ந்த மணமக்கள் நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த அருள்செல்வம் என்பவரின், இரண்டாவது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் – கவிதா தம்பதியினர் மகள் அனுவுக்கும், காங்கயம் – வட்டமலை அங்காளம்மன் கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றதால் , மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர முடிவு செய்தனர். 37.66 லட்சம் பணத்தை திருமணம் முடிந்த கையோடு, திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு – 5 லட்சம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு – 11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு – 2 லட்சம்,
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு. பிரிவு அமைக்க, 7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு 7 லட்சம் என 37.66 லட்சம் ரூபாயை பிரித்து வழங்கினர்.
எளிய முறையில் திருமணத்தை நடத்தியதில் மிச்சம் ஆன 37.66 லட்ச ரூபாய் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வழங்கிய திருப்பூர் மணமக்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.