அங்கன்வாடி குழந்தைகளுக்கு உலர் உணவு பொருட்களை வீடு தேடி சென்று வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டாலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் விதமாக சத்துணவு பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு கணக்கிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 20.01.2022 முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப் பள்ளி மாணவ/மாணவியர் உட்பட அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாட்களைக் கணக்கிட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் மொத்தம் 1,100 கி.கி. பருப்பு 54 கிராம், மொத்தம் 1/2 கி 94கிராம். கொண்டை கடலை/பாசி பருப்பு (வாரம் ஒருமுறை)20 கிராம் (வாரம் ஒருமுறை) மொத்தம் 40 கிராம். முட்டை 1 மொத்தம் 11 முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டப் பயனாளிகளாக உள்ள குழந்தைகளுக்கு ஜனவரி 10ம் தேதி முதல் அங்கன்வாடி பணியாளர்களால் அவர்தம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருட்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர் தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாகத் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை/ பாசிப் பயிறும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 42,13,617 பள்ளி மாணவ, மாணவியர் பயனடைவர். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.