ரேஷன் கடைகளில் ஜனவரி 17ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜனவரி 17ஆம் தேதி திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசும் முழு ஊரடங்கு நாளான ஜனவரி 16ம் தேதிக்கும், அரசு விடுமுறை நாளான தைப்பூசம் ஜனவரி 18ம் தேதிக்கும் இடைப்பட்ட ஜனவரி 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான பணி நாளாக ஜனவரி 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இந்த விடுமுறை முதலில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கும் பொறுத்தும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் ஜனவரி 17ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரேசன் கடைகளுக்கு ஜனவரி 17இல் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.