சென்னை:-
10 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் 20% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான சட்டத்திருத்த மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும், போலியாக சான்றிதழ் அளிப்பதை தடுக்கவும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை. ஏனெனில், கல்லூரிகளில் தமிழ்வழியில் படித்ததாக சிலர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, இட ஒதுக்கீடு பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுநாள் வரையில் தமிழ் வழியில் பட்டப்படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப் படிப்பு மட்டுமின்றி 10, 12-ம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் அரசு வேலைக்குள் நுழைவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரசின் இந்த முடிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இனிமேல், இதைக் கொண்டே TNPSC, TRB, உள்ளிட்ட தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிகிறது.