தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், துறைகள் முடங்கியிருந்த நிலையில், ரேஷன் கடை, காவல்துறை, மருத்துவத்துறை போன்ற ஒருசில அத்தியாவசியத்துறைகள் தொடர்ந்து இயங்கி வந்தன.
அப்போது அனைத்து துறையைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. மேலும், காவல்துறையினர் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளும் வகையில் இரவு பகலாக பணி புரிந்தார்கள்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தார்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதனிடையே, இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணையின் படி விடுப்புகள் கேட்பவர்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அரசாணைக்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பினார். அதற்கு அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இந்த அரசாணை முழுக்க முழுக்க மக்களின் நலன் கருதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.