அரசு துறைகளில் பதவி உயர்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16ம்தேதி முதல் 23ம்தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என தேர்வு எழுதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஒரு சிலருக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலை மற்றொரு தேர்வு மையமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை தேர்வு நடைபெறும் மையத்துக்கு மாலை தேர்வு நடைபெறும் மையத்துக்கு இடையே 70 முதல் 100 கிலோ மீட்டர் வரை தொலைவு இருப்பதால் எப்படி தேர்வு மையத்துக்கு செல்வது என குழப்பம் எழுந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக TNPSC அளித்துள்ள விளக்கத்தில்,
துறை தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை பலரும் தரவிறக்கம் செய்துள்ள நிலையில், சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டு தற்போது சில திருத்தங்களுடன் மீள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ== ஆகிய முகவரிகளில் தேர்வர்கள் அவர்களுடையே துறைத் தேர்வுகளுக்கான ஒருமுறை பதிவின் வழியாக பிறந்த தேதி,விண்ணப்ப எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத வேண்டும் என்றும் மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.