பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை செய்வதை தடுக்க கடுமையான தண்டனை தர புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (31ம் தேதி) மீண்டும் சட்டப்பேரவை கூடியது.
இன்றைய கேள்வி நேரத்தின் போது பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, “தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படுமா..?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குட்கா பொருட்கள் விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது; போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். போதைப் பொருள் விற்போர், கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது. தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.