சென்னை:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உள்ளிட்ட சில பகுதிகளில் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
யானைகள் வழித்தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயா்நீதிமன்றம் 2020 ம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து பணிகளும் முடியும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியரை எங்களது உத்தரவு இல்லாமல் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தற்போது நிர்வாக ரீதியாக பல்வேறு செயல்பாடுகள் அரசு தரப்பில் செய்ய உள்ளதால் நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்ற அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.
தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.