வாணாபுரம்:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். 2-வதாக பிறந்தவர் சிவன்யா. திருநங்கையாக மாறி விட்டார்.திருநங்கை சிவன்யா, பி.காம்.பட்டதாரியாவார். பள்ளி படிப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் படித்தார். சிவன்யா தொடர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாரானார்.
அவர் போலீஸ் துறையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றார்.அதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் 2-வது திருநங்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ம் தேதி சிவன்யா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆணையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார்.
ஏற்கனவே தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகாயாஷினி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்று தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.அந்த வரிசையில் தமிழகத்தில் 2-வதாக திருநங்கை சிவன்யா போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.