சாலைகள், தெருக்களில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெருக்கள், சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தான்தோன்றித்தனமான சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், இதுபோன்ற விபத்து சம்பவங்கள் தொடராமல் தடுக்க, மாநகராட்சி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்குச் சொந்தமான விலங்குகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே அல்லது வீட்டிலேயே கட்டி வைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ கால்நடைகளை சுற்றித்திரியவிட்டால், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்படும்.
மேலும் அவற்றின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளவில்லை எனில் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.