சமயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேருக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளித் தொல்லை இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பள்ளிக்கு டிச.25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், பள்ளியில் உள்ள பிற மாணவ- மாணவிகள் 600 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இன்று பள்ளி வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவி பயிலும் வகுப்புக்கு மட்டும் டிச.23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.