வ.உ.சி நினைவுநாள் தியாக திருநாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளையொட்டி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் வ.உ.சி நினைவுநாளான நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலை அமைக்கப்படும். வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ5. லட்சம் ரொக்கப் பரிசுடன் கப்பல் துறையில் சிறந்து விளங்கும் தமிழர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கப்பலோட்டிய தமிழன் விருது வழங்கப்படும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் ஆய்வறிக்கை வெளியிடப்படும். வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டிற்கு கட்டப்படும் கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும். வ.உ.சி எழுதிய புத்தகங்கள் புதிப்பிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். -சா.கற்பகவிக்னேஷ்வரன்