பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவையில் வெள்ளியன்று வாலிபர் சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லாப நோக்கை கைவிட்டு உயிருக்கு முன்னுரிமை கொடு. அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும். வசதி படைத்தவன் வாழ்வான் என்ற விதி ஒழியட்டும். தடுப்பூசி உற்பத்தி செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு அறைகூவல் விடுத்தது. இதன் ஒரு பகுதியாக கோவையில் வாலிபர் சங்கத்தினர் பரவலாக கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருகூர், கணபதி, சிவானந்தபுரம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், சூலூர் தாலூக செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.