தூத்துக்குடி:-
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மருத்துவ தேவைக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் நாடு முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது
இதனிடையே ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் :-
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம் என்ற மைல் கல்லை எட்டி உள்ளோம். இதுவரை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து 542.92 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், 265 டன் வாயு நிலை ஆக்சிஜன் சிலிண்டர்களும் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ எங்களது வசதிகளை மேலும் மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மைல் கல்லை எட்டுவதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டு உள்ளது.