தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இயக்குனர் சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது அடிபடுவதுண்டு. கடந்த 2009ஆம் ஆண்டே நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் “மக்கள் இயக்கம்” என்ற அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டது. இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு, அவ்வப்போது குரல் கொடுக்க ஆரம்பித்தது.
இதனிடையே, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று விஜய்யின் பெயரில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அக்கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக அவரது தாயார் ஷோபா ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 15வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தந்தை, மகனுக்கு இடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை பல மேடைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். எந்த குடும்பத்தில் மகன், தந்தைக்கு பிரச்சினைக்கு இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.
இதனிடையே, அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.