நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தைராய்டு , தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் விஜயகாந்த்தின் ஆரோக்கியம் குன்றியதால், அவரது நடை தளர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
தனது உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் விஜயகாந்த். பின்னர் சென்னையிலும், அமெரிக்காவிலும், மாறி மாறி சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது அவர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். லண்டன் மருத்துவர்கள் துபாய் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு ஜெர்கின் மற்றும் தலையில் Cap அணிந்தபடி முகக்கவசத்துடன் அவர் வீல்சேரில் அழைத்து வரப்பட்டார். அவருடன் மனைவி பிரேமலதாவும் துபாய் செல்கிறார். மேலும், அவரது இளைய மகன் சண்முகப்பாண்டியனும், உதவியாளர்கள் இருவரும் உடன் சென்றனர்.
இதனிடையே கம்பீரமான விஜயகாந்தை பார்த்து பழக்கப்பட்ட அவரது ரசிகர்கள் மற்றும் அனுதாபிகள் சிலர் விஜயகாந்த் ஏர்போர்ட் வந்த போது, அவரது நிலையை கண்டு கண்ணீர் விட்டர்.
மேலும், விஜயகாந்த் பூரண குணமடைந்து பழைய கம்பீர குரலுடன் திரும்ப வேண்டும் என்று அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.