தஞ்சாவூர் :
வீடு புகுந்து திருடியதாக கூறி இளைஞர் ஒருவரின் கண்ணை கட்டி கண்மூடித்தனமாக ஒரு கும்பல் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 22 வயதான இளைஞர் ராகுல் என்பவர் அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபடும் கும்பலிடம் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ராகுலின் கண்களை கட்டிவிட்டு, கைகளை இருவர் பிடித்துக் கொள்ள ஒருவன் ராகுலின் பின்னால் கம்பை எடுத்து கடுமையாக தாக்குகிறான். வலி தாங்க முடியாமல் ராகுல் கெஞ்சிக் கதற, அந்த கும்பல் ராகுலை சரமாரியாக தாக்கினர்.
ஒரு கட்டத்தில் ராகுலை தரையில் குப்புற படுக்க வைத்து கழுத்தில் ஒருவன் உட்கார, அவரது பாதத்தில் கம்பை எடுத்து ஒருவன் தாக்குகிறான். இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் ராகுல் அப்படியே படுத்து கிடப்பது போல அந்த வீடியோ முடிகிறது. இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவன் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான்.
அந்த கும்பலில் உள்ள ஒருவன் வீட்டில் ராகுல் 30 ஆயிரம் ரூபாய் திருடியதாகவும், அதற்காக அந்த கும்பல் ராகுலை கண்மூடித்தனமாக தாக்கியதாக ராகுலின் சகோதரர் கூறியுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.