கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தசாமிகண்ணு மகன் பொறியாளர் முருகேசன் (25). பொறியாளர் முருகேசன் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார்.
பொறியாளர் முருகேசன் கண்ணகி இருவரும் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள தனது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர்.
பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அடுத்த சில நாட்களில் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
2004 ஆண்டிலேயே சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.
விசாரணை கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜா, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கினார். மேலும், தந்தை துரைசாமி, உறவினர்கள் ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, தமிழ்மாறன், செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் லஞ்ச வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். செல்லமுத்து ஓய்வுபெற்ற டிஎஸ்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை காட்டுமிராண்டிதனமானது. குற்றவாளிகளுக்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என நீதிபதி உத்தமராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.