தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து 1முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
மேலும் 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இவர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியவை காரணமாக ஜூன் மாதம் இறுதியில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்துவது போன்ற காரணங்களினால் அடுத்த மாதம் 20 அல்லது 27ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பள்ளி கல்வித் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.