அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ எனும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் விஞ்ஞானிகள் எம்.எஸ்.சுவாமிநாதன், செளமியா சுவாமிநாதன், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது 6,7,8-ம் வகுப்பு மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து, விஞ்ஞானிகளாக மாற்றும் திட்டம் ஆகும். முதற்கட்டமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிழ்வின்போது, விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில், “நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் நாட்டில் பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இருந்து மக்களை அறிவியல் தொழில் நுட்பங்கள் காத்துள்ளது. நவீன அறிவியல் தொழில் வளர்ச்சியின் காரணமாகவே ஓராண்டுக்குள் கொரோனாவிற்கான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்தது.
இந்தியாவில் கடந்த 20 மாதங்களுக்கும் மேல் பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிற்றூர்கள், மலைவாழ் இடங்களில் வசிக்கும் மாணவர்களால் இணைய வகுப்புகளில் பங்கேற்க முடிவதில்லைை. கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறனை இழந்துள்ளனர். இதனை நவீன தொழில் நுட்ப்பங்கள் மூலமாகவும் நேரலை வகுப்புகள் மூலமாகவும் மீளுருவாக்கம் செய்ய வேண்டும்.
முகக்கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் வரை கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு தான். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இணை நோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கலாம். கொரோனா மூன்றாம் அலை வராமல் நம்மால் தடுக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்