சென்னை:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனியார் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் கடந்த ஒரு வருடமாக தனியார் நிறுவன உணவு டெலிவரி பாயாக பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் ஐடி நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், பெருங்குடியில் தெரிந்த நபரிடம் கஞ்சாவை வாங்கி அதை அடையார், மந்தவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதற்காக தான் வேலை செய்யும் உணவு நிறுவனத்தின் பை மற்றும் சீருடையை பயன்படுத்தி உள்ளார்.
இதை அறிந்த மயிலாப்பூர் காவல்துறையினர் அடையாரில் உள்ள வண்ணாந்துரையில் குணசேகரன் கஞ்சா விற்பனை செய்த போது அங்கேயே வைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த 10 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.