உலக அளவில் தெரியாத இடத்தை கண்டறிவதற்காக மக்கள் அதிகம் கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இதற்கு மாற்றாக இந்தியாவில் மேப் மை இந்தியா என்கிற நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து புதிய மேப் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கூகுள் மேப் செயலிக்கு மாற்றாக உள்நாட்டு மேப் செயலியை களத்தில் இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புதிய செயலி மூலம், குறிப்பிட்ட இடத்தின் காலநிலை, காற்று மாசு, வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்த சேவையானது தற்சார்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. மேலும், இது முற்றிலும் பாதுகாப்பானதாகவும், இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதால் புவியில் கூறுகள் குறித்த தகவல்களை துல்லியமாக வழங்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து பேசிய மேப் மை இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ, ரோஹன் வர்மா, “இந்நிறுவனம் உள்நாட்டு நிறுவனம், இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்துகின்றோம். மேலும், நாட்டின் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இது செயல்படும்.” என கூறியுள்ளார்.