மாமன்னர் ராஜராஜசோழன், கி.பி.1004-ல் தொடங்கி கி.பி.1010-ல் தஞ்சை பெரியகோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகமும் செய்தார் என்ற தகவலை கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இவரைத்தொடர்ந்து சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த 12 சோழ மன்னர் காலத்தில் பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான வரலாற்று கல்வெட்டுகள் ஏதும் இல்லை.
இடிபாடுகளுடன் பொலிவிழந்து கிடந்த தஞ்சையை மீண்டும் சோழதேசத்தின் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் விஜயநகரத்து சாம்ராஜ்யத்தின் நாயக்க மன்னர்கள். கி.பி.1535 முதல் கி.பி.1676 வரை ஆட்சி செய்த நான்கு நாயக்க மன்னர்களின் 140 ஆண்டு கால வரலாற்றிலும் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழா கண்டதாக தகவல்கள் இல்லை.
நாயக்கர் வம்சத்தை தொடர்ந்து தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கியவர்கள், மராட்டியை தாய்மொழியாக கொண்ட வடபுலத்து மராட்டிய வம்சத்தினர்.கி.பி.1855 வரை ஆட்சி செய்த 13 மராட்டிய மன்னர்களில் மூன்று பேர், பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடத்திய நிகழ்வுகளை கல்வெட்டுகள், சரஸ்வதி மகால் மோடி ஆவணங்கள், ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி அளிக்கிறது.
முதலாம் சரபோஜி மன்னர் கி.பி.1711-1729 காலத்தில் ராஜராஜசோழனுக்குப்பின் 719 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி.1729-ல் தான் இரண்டாவது கும்பாபிஷேகம் பெரிய கோவிலில் நடைபெற்றிருக்கிறது என்பது வியப்பான தகவல்.
பின் மன்னர் சரபோஜி ஆன்மிகத்திலும், மக்கள் நலனிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.மக்கள் சென்று வர வேண்டிய அளவிற்கு அகழி தூர்க்கப்பட்டது. கோட்டை சுவரை இடித்து வழி ஏற்படுத்தப்பட்டது. இரண்டாவது அடுக்கு கோட்டைச்சுவரையும் இடித்து, ராஜராஜ சோழன் கட்டிய கேரளாந்தகன் வாயிலை மறைக்காத வண்ணம் புதிய திருவாயிலை கட்டினார். இதுதான் தற்போது சரபோஜி நுழைவு வாயில் என கூறப்படுகிறது.
அற்புதமான வேலைப்பாடுகளுடன் தேர்த் திருவிழாவிற்காக ஐந்து பெரிய தேர்களும் செய்யப்பட்டு தேர்கள் நிறுத்த தேர்நிலை, மண்டபங்களும் கட்டப்பட்டன.
கி.பி.1801 தொடங்கி மூன்று ஆண்டுகள் திருப்பணிகள் நடைபெற்று கி.பி.1803-ல் பெரிய கோவில் கும்பாபிஷேகதிற்கு தயாரானது.
கும்பாபிஷேக தினத்தன்று காலை அரண்மனையில் இருந்து புறப்பட்ட சரபோஜி மன்னர், சிவகங்கை தீர்த்தக்கரையில் புனித நீராடினார். குளக்கரையில் வேத மந்திரங்களும், தேவாரம், திருவிசைப்பா இசைக்க பதினாறு வகையான தானங்கள் வழங்கப்பட்டன.
இதன் பின்னர் மங்கல வாத்திய முழக்கங்களுடன் கோவில் வளாகம் வந்த மன்னர், யாகசாலையில் இருந்து யாகம் நிறைவு பெற்று ஆரத்தி கண்டு வணங்கினார்.
புனிதநீர் நிரம்பிய குடங்களுடன் மல்லாரி இசையுடன் அணிவகுத்து சென்ற சிவாச்சாரியார்கள் அந்தந்த சன்னதி விமானங்கள், கோபுரங்களில் இருந்து கலசங்களுக்கு நீராட்டு விழா நடந்தது. மன்னர் சரபோஜியின் கனவு நனவானது.