ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பரம் 31, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
கொரோனா கோரதாண்டவத்தை அடுத்து ஒமைக்ரான் தொற்றின் பரவல் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில் இதுவரை 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அடுத்தடுத்து பண்டிகைகள் வேறு வரிசைகட்டி வருவதால், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரையில் கூட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஒமைக்ரான் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக டிசம்பர் 31, ஜனவரி 1, ஜனவரி 2 ஆகிய 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் உட்பட யாரும் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாதளமான திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் புத்தாண்டு போன்ற பண்டிகை சமயங்கள் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து குளித்து மகிழ்வது வழக்கம். தற்போது ஒமைக்ரான் பரவல் சமூக தொற்றாக மாறி வருவதால், மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.