இங்கிலாந்து இளவரசர் ஹாரி அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய அரச பட்டங்களைப் பயன்படுத்தமாட்டார்கள் என்றும் மக்களின் வரிப்பணத்தையும் பெறமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
1936 ஆம் ஆண்டு அரசர் VIIIம் எட்வர்டு – வாலிஸ் ஸிம்ஸன் என்ற அமெரிக்க பெண்ணை மணப்பதற்காக அரச பட்டத்தை துறந்த நிகழ்வு மீண்டும் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் அரச குடும்பத்தின் பங்கும் இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகின்றனர். இந்தச் சூழலில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி தம்பதி அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஹாரியும் மேகனும் கனடாவில் வாழப் போவதாகவும் அறிவித்தனர். தற்போது ஸாஸெக்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக ஹாரியும் மேகனும் உள்ளனர்.
இதுதொடர்பாக இளவரசர் சார்லஸ் விடுத்த அழைப்பின் பெயரில் ஹாரி அவரின் மனைவி மேகன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததையடுத்து அவர்களை அரச குடும்ப கடமைகளில் இருந்து விடுவிக்க முடிவு எடுத்தனர்.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இனி இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு ஸாஸெக்ஸின் இளவரசர் ஹாரியும் அவரின் மனைவி இளவரசி மேகன் மார்கலும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாகக் கருதமாட்டார்கள். அவர்கள் இருவரும் அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி எனும் பெருமைக்குரிய பட்டத்தை இனிமேல் வைத்திருக்கமாட்டார்கள்.
மக்களின் வரிப்பணத்தையும் இனிமேல் இருவரும் பெற மாட்டார்கள். மேலும் தங்களின் பரம்பரை இல்லமான ஃபிராக்மோர் காட்டேஜ் புனரமைக்கும் பணிக்காக மக்களின் வரிப்பணம் 2.4 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பெற்றதை திரும்பித் தருவதாக அறிவித்தனர்.
இந்த புதிய ஏற்பாடுகள் அனைத்தும் வரும் வசந்த காலத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.