176 பேர் உயிரிந்த உக்ரேன் விமான விபத்தில் புதிய திருப்புமுனையாக, விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறி, ஈரான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்ட 176 பயணிகளுடன் சென்ற விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டதாக ஈரான் நாட்டு ராணுவ அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விமானம் சுடப்பட்டதற்கு மனிதத் தவறுதான் காரணம் என்றும் தனது அறிக்கையில் ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான் தலைநகர், டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் தீப்பிடித்தபடி கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் ஈரானை சேர்ந்த 82 பேர், கனடாவை சேர்ந்த 63 பேர், உக்ரைனை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.
விபத்து நடந்த சமயத்தில் வானில் அதிவிரைவாக வந்த ஒரு பொருள் உக்ரைன் விமானத்தின் மீது மோதுவது போல, விமானம் தீப்பிடித்தபடி தரையில் விழுந்து வெடித்து சிதறுவதாகவும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த வீடியோ காட்சிகள் பரவியதைத் தொடர்ந்து பேட்டி அளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஈரான்தான் தவறுதலாக ஏவுகணையை ஏவி உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்நிலையில் உக்ரைன் விமானத்தை ஏவுகணையால் தாக்கியது நாங்களே என்றும் தாக்குதலுக்கு மனித தவறே காரணம் என்றும் ஈரான் அரசு கூறியுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.