உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் மருத்துவ அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனால் அனைத்து உலக நாடுகளும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதனால் சீனாவின் வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அத்தோடு சீனாவின் உள்நாட்டு போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது . மேலும் சீன நாட்டவர் மற்ற நாடுகளுக்குச் செல்லவும் மற்ற நாடுகளில் இருந்து சீனா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பயண தடை வர்த்தக ரீதியிலான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு வர்த்தக பயணம் மேற்கொள்வது முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
இந்த பயண தடைகளால் எரிபொருள் தேவை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக விமான எரிபொருள் தேவை மிக மிகக் குறைந்துள்ளது. அத்தோடு சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சீனாவின் எண்ணை தேவையில் நாளொன்றுக்கு 3 மில்லியன் பேரல்கள் வீதம் குறைந்து 20% அளவுக்கு அதன் தேவை குறைந்துள்ளது.
Brent Intermediate ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 0.31% வீழ்ந்து 55.91 டாலர்களாக உள்ளது. West Texas Intermediate பேரல் ஒன்றின் விலை 1.25% வீழ்ந்து 51.25 டாலர்களாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில் வீழ்ச்சியில் இருந்த கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக அமெரிக்க ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக சற்று உயர்ந்திருந்தது. சீனாவின் பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ஆனால் தற்போது இந்த விலை மீண்டும் வீழ்ச்சி அடையத் துவங்கியுள்ளது.
இந்த வீழ்ச்சி எண்ணெய் உற்பத்தி நாடுகள் வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் சரியும் வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து மீண்டும் பணிகள் துவங்கி இருந்தது. இதனால் கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வைரஸ் தாக்குதல் காரணமாக சீனா முடங்கியுள்ளது.
எனவே கச்சா எண்ணெயின் தேவை மேலும் குறைந்து அதன் விலையும் குறைவதால் பொருளாதார பாதிப்புகள் தொடரும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2001 செப்டம்பர் 11 தாக்குதல், 2008 உலக பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை தொடர்ந்த பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.