விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகள் திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், அவசர காலத்தில் வீரர்களை தரையிறக்கும் நோக்கத்திலும் க்ரூ டிராகன் எனும் புதிய கேப்சூல் அமைப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இது தொடர்பான சோதனை முன்பே தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்காவின் புரோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் பால்கன் 9 வகை ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டது. இதில் கேப்சூல் போன்ற அமைப்பினுள் சாதாரண மனிதர்களை போன்று 2 பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.
வெண் புகையை உமிழ்ந்தபடி விண்ணில் சீறி பாய்ந்த ராக்கெட் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே சுமார் 19 கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற போது ராக்கெட்டின் ஒரு பகுதி வெடிக்க வைக்கப்பட்டது.
அப்போது மேல்நோக்கி சென்ற கேப்சூல் சுமார் 32 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றதும் அங்கிருந்து 4 பேராசூட்டுகள் விரிக்கப்பட்டு கேப்சூல்
அட்லாண்டிக் கடலில் தரையிறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடலில் விழுந்த க்ரூ டிராகன் கேப்சூல் பின் மீட்கப்பட்டது. இந்த திட்டம் துல்லியமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.