பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு இறுதியாக ஒரே ஒரு அரச பணியில் மட்டும் ஈடுபடுமாறு மகாராணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச குடும்பத்திற்கான அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிய ஹாரி மற்றும் மேகன் தம்பதி தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்றனர்.
கடந்த வாரம் மியாமியில் முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற ஜேபி மோர்கன் (JP Morgan) மாநாட்டில் ஹரி முக்கியப் பேச்சாளராக பங்கேற்றார். இதன் மூலம் ஒரு மில்லியன் டாலர் வரை அவர் சம்பாதித்து இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டில் தன் தாய் ‘டயானா’ இறந்த போது தான் இருந்த நிலை குறித்து பேசினார்.
இந்நிலையில் தங்கள் புதிய வாழ்க்கைக்கு சிறிது இடைவெளி விட்டு விட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) இல் நடைபெறும் வருடாந்திர காமன்வெல்த் (Common Wealth Nations) நாடுகளின் கூட்டத்தில் இறுதியாக பங்கேற்க வருமாறு ஹாரி தம்பதிகளுக்கு மகாராணி கோரிக்கை விடுத்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருடம்தோறும் அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 53 காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் அரச பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த கூட்டம் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே யில் வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் வந்து கொள்ளுமாறு ஹாரி மேகன் தம்பதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது இவர்கள் பங்கேற்கும் இறுதி அரச பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மகாராணியின் இந்த கோரிக்கையை ஏற்று தம்பதிகள் கனடாவிலிருந்து இங்கிலாந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.