ராட்டர்டேம்:-
நெதர்லாந்து நாட்டில் 101 வயதான பாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துதலில் ஒரு நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் ராட்டர்டேம் (Rotterdam) நகரில் உள்ள ஜெஸ்லேண்ட் (IJsselland) மருத்துவமனையில் 101 வயதான பெண்மணி ஒருவர் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பெண்மணி தனியாக வசித்து வருகிறார், எனவே இவரை வீட்டிற்கு அனுப்பும் முன் சிறிது நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவமனை நுரையீரல் நிபுணர் (Pulmonologist) சுனில் ராம்லால்:-
இவர் மிகவும் உறுதியான பெண்மணி. நாங்கள் கூறிய மருத்துவ அறிவுரைகளை சரியாக பின்பற்றினார். தும்மல் ஏற்படும் போது கூட தனது முழங்கைகளை வைத்து மூடிக்கொண்டார். எங்களை கூட சற்று தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
இவரைப்போன்ற 100 வயதை கடந்தவர்கள் இந்த நோயிலிருந்து குணமடைய எங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது என்றார்.