ஹனோய்:-
வியட்நாமில் அகழ்வாராய்ச்சியில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லால் செய்யப்பட்ட பெரிய சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை (ASI) மேற்கொண்ட ஆய்வில், சுமார் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள சாம் கோயில் யுனெஸ்கோவின் உலக புராதானப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும்.
கோவில் வரலாறு:-
இந்த கோவில் வளாகம் 9 ஆம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் (Indravarma II) என்ற க்மெர் வம்ச மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. குவாங் நாம் மாகாணத்தில் புகழ்பெற்ற டோங் டுவோங் புத்த மடாலயத்தையும் இவர் தான் கட்டினார்.
1903-1904 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வல்லுநர்கள் இந்த கோவில் வளாகத்தை பாழடைந்த நிலையில் கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது, பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் கோவில் இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக கூறினர். இருப்பினும், அந்த நேரத்தில் குறைந்த அகழ்வாராய்ச்சி திறன் காரணமாக, அதை மீட்டெடுக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, வியட்நாமில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களும் போர்களும் கோவில் வளாகத்தை மேலும் அழிக்க வழிவகுத்தன.
இது பற்றி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் கூறுகையில்:-
இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களின் இந்த சிறந்த கண்டுபிடிப்பால், இந்தியா – வியட்நாம் இடையே இருக்கும் கலாச்சார உறவு மேம்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக தொடர்பு வெளிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.